நெருக்கடியில் சென்னிமலை கைத்தறிப் போர்வை தயாரிப்புத் தொழில்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவிலேயே 50 சதவீத அளவுக்கு கைத்தறி போர்வைகள் சென்னிமலையில்தான் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு சுமார் 30 ஆயிரம் பேர் கைத்தறி நெசவு செய்தனர். 
நெருக்கடியில் சென்னிமலை கைத்தறிப் போர்வை தயாரிப்புத் தொழில்


கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவிலேயே 50 சதவீத அளவுக்கு கைத்தறி போர்வைகள் சென்னிமலையில்தான் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு சுமார் 30 ஆயிரம் பேர் கைத்தறி நெசவு செய்தனர். மேலும், இவர்கள் நூல் நூற்றல், பாவு தேய்த்தல், இணைத்தல், பாவு சட்டம், ரகம் பிரித்தல் என பிரித்து வேலைகளை செய்வர். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமே கைத்தறி போர்வை உற்பத்திதான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதால் கைத்தறி போர்வை தயாரிப்புத் தொழில் இப்போது 50 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. 


சென்னிமலை என்றாலே நினைவுக்கு வருவது முருகன் கோயிலும், கைத்தறிப் போர்வையும்தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த கைத்தறி போர்வை உற்பத்தி தொழில் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ளதால் நெசவாளர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கூலித் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். 

நெசவில் தனிச்சிறப்பு வாய்ந்தவை சென்னிமலை கைத்தறி போர்வைகள். போர்வைகள் கைத்தறியால் நெய்யப்படுபவை என்பதால் இதன் ஆயுள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும். ஆனால், இயந்திரங்களால் தயாரிக்கப்படும் போர்வைகள் தண்ணீரில் நனைய, நனைய நிறம் மாறுவதுடன் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் நைந்து கிழிந்துவிடும்.

50 ஆண்டுகளுக்கு முன்பு விரிவடைந்த தொழில்

சென்னிமலை மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் கைத்தறி போர்வை உற்பத்தி 100 ஆண்டுகள் பாரம்பரிய கொண்டது என்றாலும், இந்தத் தொழில் 50 ஆண்டுகளுக்கு முன்புதான் விரிவடைந்தது. 

நெசவாளர்கள் தனித்தனி குழுவாக சேர்ந்து தங்களுக்கென கூட்டுறவு சங்கங்களைத் தொடங்கினர். இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து பாவு வாங்கி நெசவு செய்து உற்பத்தியான போர்வைகளை கூட்டுறவு சங்கத்திடம் மீண்டும் அளித்து வணிகம் செய்யத் தொடங்கினர். கோஆப்டெக்ஸ் தொடங்கப்பட்ட பிறகு கைத்தறி போர்வைகள் மொத்தமாக அந்த நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டன.

50 சதவீத உற்பத்தி மையம் 

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவிலேயே 50 சதவீத அளவுக்கு கைத்தறி போர்வைகள் சென்னிமலையில்தான் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு சுமார் 30 ஆயிரம் பேர் கைத்தறி நெசவு செய்தனர். மேலும், இவர்கள் நூல் நூற்றல், பாவு தேய்த்தல், இணைத்தல், பாவு சட்டம், ரகம் பிரித்தல் என பிரித்து வேலைகளை செய்வர்.

இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமே கைத்தறி போர்வை உற்பத்திதான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதால் கைத்தறி போர்வை தயாரிப்புத் தொழில் இப்போது 50 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. 

கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு கைத்தறி போர்வை நெசவுத் தொழில் படிப்படியாக தொய்வடையத் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் கடும் நெருக்கடியில் இந்த தொழில் சிக்கியுள்ளது. 30 ஆயிரம் நெசவாளர்கள் இருந்த சென்னிமலை பகுதியில் இப்போது சுமார் 5 ஆயிரத்துக்கும் குறைவான நெசவாளர்கள்தான் உள்ளனர்.

நெருக்கடியைத் தீர்க்க அரசு நம்பிக்கை தரும் எந்தச் செயல்களையும் முன்னெடுக்காத நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் பெயரளவில் நடக்கும் தொழிலாக மாறிவிட வாய்ப்புள்ளது என்கின்றனர் கைத்தறி நெசவாளர்கள். 

கூலி தொழிலாளர்களான நெசவாளர்கள்

இதுகுறித்து சென்னிமலையைச் சேர்ந்த கைத்தறி நெசவாளரும், கோஆப் டெக்ஸ் முன்னாள் இயக்குநருமான சா.மெய்யப்பன் கூறியதாவது: சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் 38 பிரதம கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்கள்தான் நெசவாளர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன. கூட்டுறவு சங்கங்களில் பாவு வாங்கித்தான் நெசவாளர்கள் போர்வை நெய்து, அதனை கூட்டுறவு சங்கத்திடம் கொடுத்து கூலியைப் பெற்று வருகின்றனர். 

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதற்கு காரணம் அரசு வழங்கும் தள்ளுபடி மானியம் சுமார் ரூ.100 கோடி வரை இந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு வரவில்லை.

எப்போதாவது வரும் சிறுத் தொகையும், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும்,  பணியாளர்களின் ஊதியத்துக்கும் சென்றுவிடுகிறது.

இதனால் நெசவாளர்களுக்கு பாவு வாங்கிக் கொடுக்க கூட்டுறவு சங்கங்களிடம் நிதி இல்லை. பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்கள் பலர் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கும், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டைக்கும், கட்டட வேலைக்கும் கூலி தொழிலாளர்களாக சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலை மாற நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தை முழுமையாக அரசு வழங்க வேண்டும். இதன் மூலம் சங்கங்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிதி கிடைக்கும்.

மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளில் சங்கங்கள் வாங்கியுள்ள கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், கைத்தறி நெசவுத் தொழிலுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க 
வேண்டும். 

இந்தத் தள்ளுபடி மானியம், கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டி விலக்கு மூன்றையும் செய்தால் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு வரும். இதன் மூலம் சென்னிமலை கைத்தறி போர்வை தயாரிப்புத் தொழில் மீண்டும் வளமான பாதையை நோக்கிச் செல்லும் என்றார்.

கோரிக்கைகள் அரசின் கவனத்தில்  

இதுகுறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அதிகாரிகள் மற்றும் கோஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறியதாவது: நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. சங்கங்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்க தள்ளுபடி மானியத்தை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக உள்ளது.

மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, குடியிருப்பு போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com