வாகனங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் ராஜன் வதேரா தெரிவித்துள்ளதாவது:
மோட்டார் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் தற்போதைய நிலையில் 28 சதவீதமாக உள்ளது. இதனை, 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கார், வர்த்தக வாகனம், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை தற்போது மோட்டார் வாகன துறைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் அமைந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மோட்டார் வாகன துறையை ஊக்குவிப்பதற்கான சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
புதிய பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வரவுள்ள நிலையில் வாகனங்களின் விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும், தேவையில் மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கும். இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி விகித குறைப்பு என்பது மோட்டார் வாகன துறைக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும் என்றார் அவர்.