இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) புதிய பிரீமியம் வருவாய் கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் 5.68 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து எல்ஐசி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நிறுவனத்தின் புதிய வர்த்தக நடவடிக்கைகள் மூலம் கிடைத்த புதிய பிரீமியம், 2018-19 நிதி ஆண்டில் 5.68 சதவீதம் அதிகரித்து ரூ.1,42,191 கோடியை எட்டியுள்ளது. இது, முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
ஓய்வூதியம் மற்றும் குழு ஓய்வூதிய வர்த்தகத்தின் மூலமான பிரீமியம் ரூ.82,807 கோடியிலிருந்து 10.11 சதவீதம் அதிகரித்து ரூ.91,179 கோடியானது.
நிறுவனத்தின் மொத்த பிரீமியம் கடந்த நிதியாண்டில் 6.08 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.3.37 லட்சம் கோடியானது. ஒட்டுமொத்த வருவாய் ரூ.5.23 லட்சம் கோடியிலிருந்து 7.10 சதவீதம் உயர்ந்து ரூ.5.60 லட்சம் கோடியானது.
பாலிசிதாரர்களுக்கு கொடுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.1.98 லட்சம் கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2.50 லட்சம் கோடியை எட்டியது என அந்த அறிக்கையில் எல்ஐசி தெரிவித்துள்ளது.
ஆயுள் காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்களின் வருகை அதிக அளவில் இருந்தபோதிலும் எல்ஐசி நிறுவனம் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.28,45,041 கோடியிலிருந்து 9.38 சதவீதம் அதிகரித்து ரூ.31,11,847 கோடியைத் தொட்டது.
யுபிஐ-பீம் செயலி வழியான நிறுவனத்தின் பிரீமியம் வசூல் கடந்த நிதியாண்டில் 106 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்ததாக எல்ஐசிதெரிவித்துள்ளது.