பணவீக்க மதிப்பீட்டின் அடிப்படை ஆண்டை மாற்றியமைக்க குழு: மத்திய அரசு
பணவீக்கம் மதிப்பீட்டிற்கான அடிப்படை ஆண்டை மாற்றியமைக்க மத்திய அரசு 18 பேர் கொண்ட குழுவை வியாழக்கிழமை அமைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தற்போது மொத்த விற்பனை விலை குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வரும் பொதுப் பணவீக்கம் 2011-12-ஆம் நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டது. இது,கடந்த 2017 மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், 2011-12 நிதியாண்டிலிருந்து பொருளாதாரத்தில் கணிசமான குறிப்பிடத்தக்க கட்டமைப்பு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டே தற்போது, பணவீக்கத்தை அளவிடுவதற்கான அடிப்படை ஆண்டை மாற்றியமைப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம், விலை நிலவரம் குறித்த உண்மையான பிம்பத்தை மேலும் தெளிவாக அறிந்து கொள்வதுடன், அது மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தையும் உணர முடியும் என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.