வரும் 2020-ஆம் ஆண்டின் மத்தியில் ஸ்மார்ட்போன் சந்தையில் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு இரட்டை இலக்க வளர்ச்சி காணும் என கொரியாவைச் சேர்ந்த எல்ஜி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எல்ஜி இந்தியா வர்த்தக தலைவர் (மொபைல்) அத்வைத் வைத்யா கூறியுள்ளதாவது:
இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் எல்ஜி நிறுவனத்தின் பங்களிப்பு வெறும் 0.5 சதவீதம் அளவுக்குத்தான் உள்ளது. இதனை அதிகரிக்க நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வரும் 2020-ஆம் ஆண்டின் மத்தியில் ஸ்மார்ட்போன் பிரிவில் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை இரட்டை இலக்க வளர்ச்சிக்கு அதிகரிக்க நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்கு, எல்ஜி டபிள்யூ பிரிவில் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போன்களின் விற்பனை பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றின் விற்பனை தற்போது ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெற்று வருகிறது. வரும் பண்டிகை காலத்தில் அங்காடிகள் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையைப் பொருத்தவரையில் 5ஜி சேவை அமெரிக்கா, கொரியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா மிக விரைவில் 5ஜி ஸ்மார்ட்போன் சேவையை நோக்கி நகர உள்ளது. எனவே இப்பிரிவில் எல்ஜி நிறுவனத்தின் பங்களிப்பை கணிசமான அளவில் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புணேயில் உள்ள எல்ஜி ஆலையில் ஸ்மார்ட்போனின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதுஎன்றார் அவர்.