இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்து முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக லேசான சரிவுடன் முடிவடைந்தது.
பிப்ரவரி மாதத்துக்கான பங்கு முன்பேர கணக்கு முடிப்பையொட்டி காலையில் நடைபெற்ற வர்த்தகம் இறுக்கமான அளவிலான வீச்சுடனேயே காணப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை என்ற முதலீட்டாளர்களின் நிலைப்பாட்டால் நடுத்தர, சிறிய பிரிவைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. இதனால், சந்தையில் ஏற்படவிருந்த பெரும் சரிவு கட்டுக்குள் வந்தது.
முதலீட்டாளர்களின் வரவேற்பு இல்லாத காரணத்தால் டிசிஎஸ் பங்கின் விலை 3.38 சதவீதமும், மாருதி சுஸுகி 1.77 சதவீதமும் சரிவைக் கண்டன.அதேசமயம், ஓஎன்ஜிசி மற்றும் கோல் இந்தியா பங்குகளின் விலை முறையே 4.17 சதவீதம் மற்றும் 3.16 சதவீதம் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து 35,867 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 15 புள்ளிகள் குறைந்து 10,792 புள்ளிகளில் நிலைபெற்றது.