ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் உலோகங்கள் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது:
உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் கொள்கை திட்டங்களை வகுத்துள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டுள்ளதும் பாதிப்பை அதிகமாக்கியுள்ளது.
நடப்பாண்டு ஜனவரியில் உருக்கு ஏற்றுமதி 10.7 சதவீதம் சரிந்துள்ளது. அதேபோன்று, நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் இதன் ஏற்றுமதி 14 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.தாமிரம் மற்றும் தாமிரப் பொருள்களின் ஏற்றுமதி நடப்பாண்டு ஜனவரியில் 76.6 சதவீதம் அளவுக்கும், நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 69.6 சதவீதம் அளவுக்கும் சரிந்துள்ளது.
நடப்பு 2018-19 நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் நாட்டின் தாமிர உற்பத்தி கணிசமான அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பங்களிப்பு இல்லாமல் போனதே முக்கிய காரணம்.
மேலும் ஜனவரியில் துத்தநாகம் ஏற்றுமதியும் 17.6 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இதன் ஏற்றுமதி 29.7 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
உலோகங்கள் ஏற்றுமதி பின்னடைவைக் கண்டுள்ளதற்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா முக்கிய காரணங்களாகியுள்ளன. உலோகங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு நிலை மேலும் சில காலத்துக்கு நீடிக்கவே வாய்ப்புள்ளது. எனவே, ஏற்றுமதியாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரமிது என்று இஇபிசி தெரிவித்துள்ளது.
பொறியியல் சாதனங்கள், தோல் மற்றும் நவரத்தினங்கள் & ஆபரணங்கள் ஏற்றுமதி குறைந்து போனதையடுத்து, நடப்பாண்டு ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி மிகவும் குறைந்தபட்சமாக 3.74 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி கண்டது. அதேசமயம், வர்த்தக பற்றாக்குறையானது 1,473 கோடி டாலராக குறைந்தது.