பிக்பஜார் கிளைகளின் விரிவாக்கத்தில் அதிக மும்முரம் காட்டி வருவதாக ப்யூச்சர் ரீடெயில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் அதிலும் குறிப்பாக மேற்கு வங்கம், பிகார், ஒடிஸா, வடகிழக்கு மாநிலங்களில் பிக்பஜார் அங்காடிகளை அதிக அளவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு ரூ.150-200 கோடி செலவிடப்படவுள்ளது.
நடப்பாண்டு ஏப்ரலிலிருந்து கிழக்கு மாநிலங்களில் மட்டும் 25 பிக்பஜார் அங்காடிகளை திறக்கவுள்ளோம். ஒவ்வொரு அங்காடியும் அமைப்பதற்கு சதுர அடிக்கு ரூ.2,000 அளவிலான முதலீடு தேவைப்படும்.தேசிய அளவிலான விற்பனையில் கிழக்கு மாநிலங்களின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது. கிழக்குப் பகுதியிலிருந்து கிடைக்கும் மொத்த வருவாயில் மேற்கு வங்கத்தின் பங்களிப்பு மட்டும் 30 சதவீதம் அளவுக்கு உள்ளது.
இதையடுத்து, கொல்கத்தாவில் மட்டும் 7-8 பிக்பஜார் அங்காடிகளை திறக்கப்படவுள்ளது. புறநகர் பகுதியில் அடுத்த நிதியாண்டில் 25 அங்காடிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
ப்யூச்சர் ரீடெயில் கொல்கத்தாவில் தனது 17-ஆவது பிக்பஜார் அங்காடியை சனிக்கிழமை திறந்தது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் பிக்பஜாரின் கிளைகளின் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது.