இந்தியாவில் வீட்டு உபயோகத்துக்கான ஏசி (குளிர்சாதனக் கருவி) பிரிவில் 40 சதவீத சந்தையைப் பிடிக்க தென்கொரியாவின் நுகர்வோர் மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான எல்ஜி இலக்கு நிர்ணயித்துள்ளது.
குறைந்த மின்சார செலவில் சிறப்பாக செயல்படும் ஏசி உள்பட இந்திய நுகர்வோரைக் கவரும் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக எல்ஜி இந்தியா நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் இன்வெர்ட்டர் ஏசி பிரிவில் கடந்த 2018-ஆம் ஆண்டு எல்ஜி-யின் பங்களிப்பு 38 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு அதனை 40 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், ஏசி விற்பனை அதிகரிக்கும். எங்கள் நிறுவனத்தின் 5 நட்சத்திர குறியீடு ஏசிக்களுக்கு எப்போதும் இந்திய மக்களிடம் சிறப்பான வரவேற்பு உண்டு.
மெட்ரோ நகரங்களைத் தாண்டி அடுத்த கட்ட நகரங்களிலும் இப்போது சிறப்பான விற்பனை வாய்ப்புகள் உள்ளன. எனவே, இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரப்பகுதிகளிலும் விற்பனை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏசி விற்பனையில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.