மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 37,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்ற தகவல்கள் வெளியானது.
இதுகுறித்த எதிர்பார்ப்பால், முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்தனர்.
மேலும், சாதகமான உலக நிலவரங்களால் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தது பங்குச் சந்தைகளின் வலுவான ஏற்றத்துக்கு உரம் சேர்த்தது.
மின்சாரம், எண்ணெய்-எரிவாயு, உலோகம், வங்கி, மோட்டார் வாகனம், பொறியியல் சாதனங்கள், உள்கட்டமைப்பு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக தேவை காணப்பட்டது.
திங்கள்கிழமை வர்த்தக்தில், பார்தி ஏர்டெல் பங்கின் விலை உச்சபட்சமாக 8.08 சதவீதம் உயர்ந்தது. அதையடுத்து, பவர் கிரிட் பங்கின் விலை 3.90 சதவீத ஏற்றத்தைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 382 புள்ளிகள் அதிகரித்து 37,054 புள்ளிகளில் நிலைத்தது. ஆறு மாதங்களுக்குப் சென்செக்ஸ் இந்த அளவுக்கு உச்சத்தைத் தொடுவது இதுவே முதல் முறை.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 132 புள்ளிகள் உயர்ந்து 11,168 புள்ளிகளில் நிலைபெற்றது.