பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 481 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம் காணப்பட்டதையடுத்து சென்செக்ஸ் 481 புள்ளிகள் வரை அதிகரித்தது.
பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 481 புள்ளிகள் அதிகரிப்பு


இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம் காணப்பட்டதையடுத்து சென்செக்ஸ் 481 புள்ளிகள் வரை அதிகரித்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, அந்நிய முதலீட்டு வரத்து தொடர்ந்து அதிகரிப்பு, தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து கணிப்பு ஆகியவை பங்குச் சந்தைகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின.  இதைத்தவிர, சர்வதேச பங்குச் சந்தைகளில் காணப்பட்ட விறுவிறுப்பும் பங்குச் சந்தைகளின் எழுச்சிக்கு பக்கபலமாக இருந்தது.
முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்ததையடுத்து, ரியல் எஸ்டேட் துறையின் குறியீட்டெண் 2.60 சதவீதம் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, தொலைத்தொடர்பு, வங்கி, மருந்து, மற்றும் நிதி துறையைச் சேர்ந்த குறியீட்டெண்களும் ஏற்றத்தை சந்தித்தன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளின் விலை 4.61 சதவீதம் உயர்ந்தது. இதையடுத்து, ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, எல் அண்டு டி, சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார் பங்குகளின் விலையும் 3.69 சதவீதம் வரை உயர்ந்தன. அதேசமயம், ஓஎன்ஜிசி, என்டிபிசி, கோல் இந்தியா, யெஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ பங்குகளின் விலை 1.13 சதவீதம் வரை குறைந்தன.
ரூபாய் மதிப்பு வலுவடைந்ததையடுத்து, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா பங்குகளின் விலையும் 1.22 சதவீதம் வரை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 481 புள்ளிகள் அதிகரித்து 37,535.66 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 133 புள்ளிகள் உயர்ந்து 11,301 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com