தேவையில் காணப்பட்ட மந்த நிலையின் எதிரொலியாக மாருதி சுஸுகி நிறுவனம் சென்ற பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் அளவுக்கு வாகன உற்பத்தியை குறைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம், இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) தெரிவித்துள்ளதாவது:
கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் சூப்பர் கேரி உள்ளிட்ட வாகனங்களின் உற்பத்தி 1,62,524 ஆக இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டு பிப்ரவரியில் இதன் உற்பத்தி 8.3 சதவீதம் குறைக்கப்பட்டு 1,48,959 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
அதேபோன்று, ஆல்டோ, ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா ப்ரெஸ்ஸா உள்ளிட்ட பயணிகள் வாகன தயாரிப்பும் 1,61,898 என்ற அளவிலிருந்து 8.4 சதவீதம் குறைக்கப்பட்டு 1,47,550 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது.
அதேசமயம், ஆம்னி, ஈகோ உள்ளிட்ட வேன்களின் உற்பத்தி 13,827 என்ற எண்ணிக்கையிலிருந்து 22.1 சதவீதம் அதிகரித்து 16,898-ஆக இருந்தது.
குறிப்பாக, சென்ற பிப்ரவரியில் சூப்பர் கேரி இலகு ரக வாகனம் ஒன்றே ஒன்று மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
உற்பத்தி குறைப்பு தொடர்பாக மாருதி சுஸுகி நிறுவனம் கருத்து எதையும் கூற மறுத்துவிட்டது.
புதிய வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததையடுத்து, கடந்தாண்டைக் காட்டிலும் சென்ற பிப்ரவரி மாதத்தில் பயணிகள் வாகன சில்லறை விற்பனை 8.25 சதவீதம் சரிந்து 2,15,276-ஆக மட்டுமே இருந்தது என மோட்டார் வாகன விநியோகஸ்தர்கள் அமைப்பான எப்ஏடிஏ கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.