பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம், கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் குறைந்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வங்கியின் நிகர இழப்பு ரூ.551.53-ஆ உள்ளது. இது, 2017-18-ஆம் நிதியாண்டின் இதே கால அளவில் வங்கி சந்தித்த ரூ.4,859.77 கோடியைவிட பல மடங்கு குறைவாகும்.
வங்கியின் வாராக் கடன் விகிதங்கள் குறைந்ததாலேயே, இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 ஜனவரி மாதம் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 11.84 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் விகிதம், நிகழாண்டின் இதே மாதங்களில் 8.83 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நிகர வாராக் கடன் விகித்தைப் பொருத்தவரை, இந்த மாதங்களில் அது கடந்த ஆண்டில் 7.48 சதவீதமாக இருந்து, நிகழாண்டில் 5.37 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.