இந்தியன் வங்கியின் ஆண்டு நிகர லாபம் ரூ.322 கோடி
இந்தியன் வங்கி கடந்த 2018-19 நிதி ஆண்டில் நிகர லாபமாக ரூ.322 கோடியை ஈட்டியுள்ளது என அவ்வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்துரு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இந்தியன் வங்கியின் நிர்வாகக்குழு இயக்குநர்கள் கூட்டம் வங்கியின் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு தலைமையில் கோபாலபுரத்தில் உள்ள வங்கியின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பத்மஜா சுந்துரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியன் வங்கியின் உலகளாவிய மொத்த வர்த்தகமானது 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.4,29,972 கோடியை எட்டியுள்ளது. இது, 2017-18 நிதியாண்டின் மொத்த வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது 16 சதவீதம் அதிகம். அதேபோல் உலகளாவிய வைப்புத் தொகையும் 16 சதவீதம் அதிகரித்து ரூ.2,42,076 கோடியைத் தொட்டுள்ளது. மேலும், வங்கி வழங்கிய கடன் 15 சதவீதம் அதிகரித்து ரூ.1,87,896 கோடியாகி உள்ளது. சில்லறைக் கடன் 13 சதவீதமும், விவசாயக் கடன் 25 சதவீதமும், சிறுகுறு நடுத்தரத் தொழில்களுக்கான கடன் 15 சதவீதமும் உயர்ந்துள்ளது.
2018-19 நிதியாண்டில் மொத்த வருவாய் 8 சதவீதம் அதிகரித்து ரூ.21,068 கோடியாக உள்ளது. வங்கியின் வட்டி வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ரூ.19,185 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.322 கோடியாக இருந்தது.
கடந்த நிதி ஆண்டு வரை ரூ. 13 ஆயிரத்து 300 கோடி அளவிற்கு வாராக்கடன் உள்ளது. விவசாயிகள் மட்டுமே அதிக அளவில் கடனைத் திருப்பிச் செலுத்தி உள்ளனர். வாராக்கடனை வசூலிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சுய உதவிக் குழு இணைப்புச் செயல்பாட்டுக்காக தமிழக அரசின் விருதினை தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக இந்தியன் வங்கி பெற்றுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில் செயல் இயக்குநர்கள் எம்.கே.பட்டாச்சார்யா, வி.வி.ஷெனாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.