2018-19-ஆம் நிதியாண்டில் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய நிதியாண்டை விட 57 சதவீதம் அதிகரித்து ரூ.45.34 கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை அந்நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.இஸபெல்லா வெளியிட்டு கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டிலும், தென் மாநில அரசுகள் பங்கேற்பிலும் 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரெப்கோ வங்கியால் 2007-ஆம் ஆண்டு ரெப்கோ நுண்கடன் நிறுவனம் தொடங்கப்பட்டது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் வழங்கிய நுண்கடன் தொகை 30 சதவீதம் அதிகரித்து ரூ.927 கோடியாக உள்ளது. இதேபோல் நிகர லாபத்தில் 57 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ரூ.166 கோடியினை நிகர மதிப்பாக கொண்டுள்ளது. மொத்த வாராக் கடன் 0.87 சதவீதம் மற்றும் நிகர வாராக் கடன் பூஜ்ஜியம் என்னும் நிலையையும் கொண்டுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பள்ளிகளுக்கு கழிப்பறை, வகுப்பறை கட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்குதல் போன்ற பல்வேறு சமுதாயப் பொறுப்பு பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. வரும் 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.1,300 கோடி நுண்கடன் நிலுவைத் தொகையையும், 110 கிளைகளையும் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என்றார்.