சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கி நான்காம் காலாண்டில் ரூ.175.12 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
நிதி நிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டு அவ்வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான என்.காமகோடி கூறியதாவது:
சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.1,131.44 கோடியாக இருந்தது. கடந்த 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் வருவாய் ரூ.990.48 கோடியாக காணப்பட்டது.
நிகர லாபம் ரூ.152.12 கோடியிலிருந்து 15.1 சதவீதம் அதிகரித்து ரூ.175.12 கோடியை எட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2018-19 முழு நிதியாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,934.52 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.4,281.55 கோடியாகி உள்ளது. நிகர லாபம் ரூ.592 கோடியிலிருந்து 15.3 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.682.25 கோடியைத் தொட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.61,091 கோடியிலிருந்து 17 சதவீதம் அதிகரித்து ரூ.71,513 கோடியாகி உள்ளது. இதில், திரட்டப்பட்ட டெபாசிட் ரூ.32,583 கோடியிலிருந்து 17 சதவீதம் உயர்ந்து ரூ.38,448 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன்கள் ரூ.28,238 கோடியிலிருந்து 17 சதவீதம் அதிகரித்து ரூ.33,065 கோடியாகவும் இருந்தது.
நடப்பாண்டு மார்ச் 31 நிலவரப்படி மொத்த வாராக் கடன் ரூ.977 கோடியாகவும் (2.95%), நிகர வாராக் கடன் ரூ.591 கோடியாகவும் (1.81%) காணப்பட்டது.
சென்ற நிதியாண்டுக்கு ரூ.1 முகமதிப்பைக் கொண்ட பங்கு ஒன்றுக்கு 50 சதவீத (50 காசுகள்) ஈவுத்தொகை வழங்க வங்கியின் இயக்குநர்குழு பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.