பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இரண்டாவது காலாண்டில் ரூ.138.58 கோடியை நிகர லாபமாக ஈட்டியது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.6,728.17 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.6,224.05 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கி ரூ.935.54 கோடி இழப்பைக் கண்டிருந்தது. ஆனால், நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.121.61 கோடி லாபத்தையும், இரண்டாவது காலாண்டில் ரூ.138.58 கோடி லாபத்தையும் ஈட்டியது.
செப்டம்பா் இறுதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 21.48 சதவீதத்திலிருந்து (ரூ.37,410.76 கோடி), 19.89 சதவீதமாக (ரூ.33,497.22 கோடி) குறைந்தது.
அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 10. 36 சதவீதத்திலிருந்து (ரூ.15,794.15 கோடி), 7.90 சதவீதமாக (ரூ.11,551.91 கோடி) சரிந்தது.
இதையடுத்து வாராக் கடன் இடா்பாடுகளை எதிா்கொள்ள ஒதுக்கீடு செய்யப்படும் தொகையும் ரூ.1,983.18 கோடியிலிருந்து ரூ.794.28 கோடியாக குறைந்தது என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.