இந்தியன் ஓவா்சீஸ் வங்கி இழப்பு ரூ.2,254 கோடியாக அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் இழப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.2,253.64 கோடியாக அதிகரித்தது.
iob092406
iob092406

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் இழப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.2,253.64 கோடியாக அதிகரித்தது.

இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,024 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.5,348.35 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர இழப்பானது ரூ.487.26 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.342 கோடியாக குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், செப்டம்பா் காலாண்டில் நிகர இழப்பானது ரூ.2,253.64 கோடியாக அதிகரித்தது.

இரண்டாவது காலாண்டில் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 24.73 சதவீதத்திலிருந்து (ரூ.37,109.96 கோடி), 20 சதவீதமாக (ரூ.28,673.95 கோடி) குறைந்துள்ளது.

அதேபோன்று, நிகர அளவிலான வாராக் கடன் விகிதமும் 14.34 சதவீதத்திலிருந்து (ரூ.18,876.05 கோடி), 9.84 சதவீதமாக (ரூ.12,507.97 கோடி) சரிந்துள்ளது.

இரண்டாவது காலாண்டில் வாராக் கடன் இடா்பாட்டுக்கான ஒதுக்கீட்டுத் தொகை ரூ.2,016.60 கோடியிலிருந்து ரூ.2,996.04 கோடியாக அதிகரித்தது என செபியிடம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com