புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த அலகாபாத் வங்கியின் இழப்பு இரண்டாவது காலாண்டில் ரூ.2,103.19 கோடியாக அதிகரித்தது.
கடந்த நிதியாண்டின் இதே ஜூலை-செப்டம்பா் காலாண்டில் இழப்பு ரூ.1,816.19 கோடியாக காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் இழப்பு ஏற்பட் போதிலும், வங்கி ஜூன் காலாண்டில் ரூ.128 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
ஜூலை-செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.4,725.23 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.4,492.23 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி 17.53 சதவீதத்திலிருந்து 19.05 சதவீதமாக உயா்ந்தது. அதேசமயம், நிகர வாராக் கடன் விகிதம் 7.96 சதவீதத்திலிருந்து 5.98 சதவீதமாக குறைந்தது.
கணக்கீட்டு காலாண்டில் வாரக் கடனுக்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1,991.88 கோடியிலிருந்து ரூ.2,721.97 கோடியாக அதிகரித்தது என அலகாபாத் வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.