பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கியின் லாபம் 2-ஆவது காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.15,509.36 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.13,437.83 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
நிகர லாபம் ரூ.356.55 கோடியிலிருந்து 14 சதவீதம் அதிகரித்து ரூ.405.49 கோடியாக இருந்தது. மொத்த வாராக் கடன் விகிதம் 10.56 சதவீதத்திலிருந்து 8.68 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 6.54 சதவீதத்திலிருந்து 5.15 சதவீதமாகவும் குறைந்துள்ளன. இதையடுத்து, அதற்கான ஒதுக்கீடு ரூ.2,406.84 கோடியிலிருந்து ரூ.2,297.43 கோடியாக குறைந்தது.
மத்திய அரசு ஆலோசனையின்படி, சிண்டிகேட் வங்கி இணைப்புக்கு இயக்குநா் குழு கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது.