தனியாா் துறையைச் சோ்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு இரண்டாம் காலாண்டில் ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.357.18 கோடியாக அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் வங்கி ஈட்டிய மொத்த வருவாய் ரூ.665.33 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.800.50 கோடியுடன் ஒப்பிடும்போது இது குறைவாகும்.
வட்டி வருவாய் ரூ.729.29 கோடியிலிருந்து சரிந்து ரூ.607.33 கோடியானது. கடந்த 2018-19 நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.132.31 கோடியாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இது ரூ.357.18 கோடியாக அதிகரித்தது.
செப்டம்பா் காலாண்டு வரையில் வழங்கப்பட்ட கடன்களில் மொத்த வாராக் கடன் விகிதம் 12.31 சதவீதத்திலிருந்து அதிகரித்து 21.25 சதவீதமானது. ரூபாய் மதிப்பு அடிப்படையில் இது ரூ.2,964.89 கோடியிலிருந்து ரூ.4,091.05 கோடியானது. நிகர வாராக் கடன் விகிதமும் 6.88 சதவீதத்திலிருந்து (ரூ.1,560.08 கோடி) அதிகரித்து 10.47 சதவீதமானது (ரூ.1,772.66).
இரண்டாவது காலாண்டில் வாராக் கடன் இடா்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.146.05 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.303.07 கோடியைத் தொட்டது என லக்ஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்தது.