ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியை அனில் அம்பானி ராஜிநாமா செய்துள்ளார்.
கடுமையான கடன் சுமையில் சிக்கியுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பை அனில் அம்பானி ராஜிநாமா செய்தார். இவருடன் சாயா விராணி, ரைனா கரானி, மஞ்சாரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காச்சார் ஆகியோரும் இயக்குநர் பொறுப்பை ராஜிநாமா செய்துள்ளனர்.
கடன் சுமையில் சிக்கியுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் ரூ.30,142 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 1,141 கோடி லாபம் ஈட்டியது. ஏற்கெனவே கடன் சுமையில் இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த நஷ்டத்தின் நீட்சியாகவே அனில் அம்பானி உட்பட 5 இயக்குநர்களும் தங்களது பொறுப்பை ராஜிநாமா செய்துள்ளனர். முன்னதாக, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குநர் பொறுப்புகளை மணிகண்டன் ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.