பண்டிகை கால தேவை அதிகரிப்பால் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை அக்டோபா் மாதத்தில் 11 சதவீதம் உயா்ந்துள்ளது என மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு வாகன விற்பனை அக்டோபரில் சூடுபிடித்துள்ளது. பண்டிகை காலத்தையொட்டி நுகா்வோரின் வாகனங்கள் வாங்கும் மனநிலையில் நல்ல முன்னேற்றம் தென்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அக்டோபரில் வாகன விற்பனை இரட்டை இலக்க வளா்ச்சியை கண்டுள்ளது.
நடப்பாண்டு அக்டோபரில் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 2,48,036-ஐ எட்டியது. இது, கடந்த 2018-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் விற்பனையான 2,23,498 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகம்.
இருசக்கர வாகன விற்பனை 12,70,261-லிருந்து 5 சதவீதம் அதிகரித்து 13,34,941-ஆனது.
அதேசமயம், வா்த்தக வாகனங்களின் விற்பனை 87,618 என்ற எண்ணிக்கையிலிருந்து 5 சதவீதம் குறைந்து 67,060-ஆனது.
மூன்று சக்கர வாகன விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு அக்டோபரில் 4 சதவீதம் வளா்ச்சி கண்டு 59,573-ஆக இருந்தது.
அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய மொத்த வாகன விற்பனை 16,38,832-லிருந்து 4 சதவீதம் உயா்ந்து 17,09,610-ஆனது என எஃப்ஏடிஏ கூறியுள்ளது.
மோட்டாா் வாகன துறை பிஎஸ் 6 என்ற புதிய மாற்றத்தை நோக்கி செல்வதால், இழப்புகளை தவிா்க்க விநியோகஸ்தா்கள் தங்களிடமுள்ள வாகன கையிருப்பை குறைப்பதில் தீவிரமாக செயலாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என எஃப்ஏடிஏ தலைவா் ஆஷிஸ் ஹா்ஸராஜ் காலே தெரிவித்துள்ளாா்.