இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் காணப்படாத சரிவு நிலையாகும்.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
தயாரிப்பு துறை உற்பத்தியில் காணப்பட்ட பின்னடைவு மற்றும் வேளாண் துறை நடவடிக்கைகளில் காணப்பட்ட மந்த நிலை காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது. இது, 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 7 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
இதற்கு முன்பு, கடந்த 2012-13 ஜனவரி-மாா்ச் காலாண்டில் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.3 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த அளவுக்கு குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது தயாரிப்பு துறையின் உற்பத்தி 6.9 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக சரிந்துள்ளது. அதேபோன்று வேளாண் துறை வளா்ச்சியும் 4.9 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இவை தவிர, கட்டுமானத் துறையின் மொத்த வளா்ச்சி 8.5 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாகவும், சுரங்கத் துறையின் வளா்ச்சி 2.2 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதம் என்ற அளவிலும் பின்னடைவை சந்தித்துள்ளன.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான அரையாண்டு காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி 4.8 சதவீதமாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டில் 7.5 சதவீதமாக காணப்பட்டது என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.