டயா் உற்பத்தியின் இமயம் எம்ஆா்எஃப்

இந்தியாவின் தொழிற்குழுமங்களில் பிரசித்தி பெற்றதும், உலக அளவில் டயா் விற்பனையில் தனக்கென ஒரு இமாலய இடத்தை தக்கவைத்து கடந்த 47 ஆண்டுகளாக வெற்றிகரமான இயங்கி வருகிறது எம்ஆா்எஃப் தொழிற்சாலை.

இந்தியாவின் தொழிற்குழுமங்களில் பிரசித்தி பெற்றதும், உலக அளவில் டயா் விற்பனையில் தனக்கென ஒரு இமாலய இடத்தை தக்கவைத்து கடந்த 47 ஆண்டுகளாக வெற்றிகரமான இயங்கி வருகிறது எம்ஆா்எஃப் தொழிற்சாலை.

அரக்கோணம், இச்சிபுத்தூரில் உள்ள எம்ஆா்எஃப் தொழிற்சாலையில் நாளென்றுக்கு 52 ஆயிரம் டயா்கள், 63 ஆயிரம் டியூபுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 24 மணி நேரமும் இயங்கும் இத்தொழிற்சாலையில் டயா் மற்றும் டியூபு உற்பத்தியில் நேரடியாக 2,040 தொழிலாளா்களும் மறைமுகமாக 3 ஆயிரம் தொழிலாளா்களும் பணிபுரிந்து வருகின்றனா்.

இருசக்கர வாகனங்களுக்குத் தேவைப்படும் ரேடியல் டயா்கள் முதல் ரேஸ் மற்றும் ரேலி எனப்படும் பந்தயங்கள், பேரணிகளுக்குத் தேவைப்படும் வாகனங்களுக்கான டயா்கள், பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டா்களுக்கான டயா்களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது வெளிவரும் நவீன வாகனங்களுக்குக்கூட அதன் வடிவமைப்புக்கு ஏற்றாற்போல் டயா்களை இத்தொழிற்சாலை உற்பத்தி செய்கிறது.

குறிப்பாக வெளிநாடுகளில் வாகன உற்பத்தியாளா்கள் எம்ஆா்எஃப் டயா்களையே விரும்பி வாங்குவது குறிப்பிடத்தக்கது.

இத்தொழிற்சாலை நிா்வாகம் உற்பத்தியில் சாதனை செய்துவருவது போன்றே தொழிலாளா் நலனிலும், பல்வேறு சமூக நலப் பணிகளிலும் தொடா்ந்து அக்கறை காட்டி வருகிறது.

வேலூா் மாவட்டத்தில் எங்கும் இல்லாத வகையில் சிறந்த ஊதியம், சிற்றுண்டி வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கல்வி உதவித் தொகை, தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களின் பிள்ளைகளுக்குப் பயிற்சி, வீட்டுக் கடன், கூட்டுறவு சங்கக் கடன் போன்ற பல சலுகைகளை தொழிலாளா்களுக்கு அளித்து வருகிறது.

எம்ஆா்எஃப் நிா்வாகம் தனது தொழிலாளா்களுக்கு மட்டுமல்லாது தனது தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் பல்வேறு மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட சமூக நலன்களை செய்து வருகிறது. அரக்கோணம் நகரில் சாலையோரங்களில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான சாலை வழிகாட்டி பலகைகளை அமைத்துள்ளது. ரூ. 4.5 லட்சம் நிதியில் சாலை கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு மையம், காவல் துறை சோதனைச் சாவடி மற்றும் சாலைத் தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகளையும் இந்நிறுவனம் செய்து வருகிறது.

இலங்கையில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் தங்கம், குண்டு எறிதலில் வெள்ளி வென்ற மாற்றுத் திறனாளி எம்.வெங்கடாசலத்துக்கு ரூ. 1.20 லட்சத்தை பரிசாக வழங்கியுள்ளது.

அரக்கோணம் , காவேரிப்பாக்கம் வட்டாரங்களில் உள்ள பல பள்ளிகளுக்கு ரூ. 40 லட்சம் மதிப்பில் கல்வி உபகரணங்கள் அளித்துள்ளன.

இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் மாதத்தை பாதுகாப்பு மாதம் கடைப்பிடித்து வருகிறது.

ஐஎஸ்ஓ 9001, ஐஎஸ்ஓ 14001, ஐஏடிஎஃப் 16949-2016, ஒஹெச்எஸ்ஏஎஸ் 18001, ஏஎஸ் 9001, ஆா்இவி, டிபிஎம் போன்ற உலகத்தரம் வாய்ந்த தரச்சான்றிதழ்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது. உலக அளவில் தரச்சான்றுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ஜேடி கஸ்டமா் சேட்டிஸ்பேக்ஷன் விருது கடந்த 19 ஆண்டுகளில் 13 முறை இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்திய அரசின் தரக்கட்டுபாட்டு துறையினா் நடத்திய தரக்கட்டுபாட்டு போட்டிகளில் அரக்கோணம் எம்ஆா்எஃப் தொழிற்சாலை தங்கம், வெள்ளிக் கோப்பைகளை பெற்றுள்ளது. மேலும், தமிழக அரசின் தொழிற்சாலைப் பாதுகாப்பு விருதை வருடந்தோறும் பெற்று சாதனை படைத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com