உலக உத்தமர் கலாம் - தொகுப்பாசிரியர்: கவிதாசன்; பக்.224; ரூ.150; குமரன் பதிப்பகம், சென்னை-17; ) 044- 2435 3742.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் பழகியவர்கள் அவருடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்விதமாக எழுதப்பட்ட 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
முன்னாள் சி.பி.ஐ.இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், காவல்துறை கூடுதல் இயக்குநர் செ.சைலேந்திரபாபு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம், நெல்லை சு.முத்து உள்பட 18 ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளிலிருந்து அப்துல்கலாம் என்ற மனிதரின் உயர்ந்த பண்பு, பழகும் விதம், பிறரின் துன்ப, துயரங்களில் பங்கெடுக்கும் தன்மை, வித்தியாசமான அவருடைய சிந்தனைகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஏழ்மை, படிப்பறிவின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை இந்திய நாட்டின் மோசமான 3 எதிரிகளாக அப்துல்கலாம் கருதியிருக்கிறார்.
"நான் என்றைக்கும் இந்தியா வல்லரசாக மாற வேண்டுமென்று கூறியதில்லை. வல்லரசு என்பது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற அரசு. அப்படிப்பட்ட நாடாக இந்தியா மாற வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றுதான் கூறிவருகிறேன்'' என்று கலாம் கூறியதாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
அப்துல்கலாமுக்கு மிகவும் பிடித்த புத்தகங்களாக தத்துவானி ஹென்றி டேவிட் தோரோ எழுதிய "வால்டன்' , ஜி.வெங்கட்ராமன் எழுதிய சர்.சி.வி.இராமனின் வாழ்க்கைச் சரிதம் மற்றும் காமேஸ்வரர் வாலி எழுதிய விஞ்ஞானி சந்திரசேகர் பற்றிய புத்தகம் ஆகியவை இருந்திருக்கின்றன.
கிராமப்புற வளர்ச்சிக்காக அப்துல்கலாம் மேற்கொண்ட "புரா' திட்டம், அவர் எழுதிய புத்தகங்கள் பற்றிய தகவல்கள் என அப்துல்கலாமைப் பற்றி தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.