எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் அடுத்த சில ஆண்டுகளில் 11,800 கோடி டாலர் (சுமார் ரூ.8 லட்சம் கோடி) முதலீடு மேற்கொள்ளப்படும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய எரிசக்தி அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் எண்ணெய், எரிவாயு துரப்பண- உற்பத்தித் துறையில் 5,800 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்படும். எஞ்சிய 6,000 கோடி டாலர் இயற்கை எரிவாயு கட்டமைப்பு உருவாக்க நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்படும்.
இன்றைய நிலையில், சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. எரிசக்தி நுகர்வில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் உலக எரிசக்தி தேவையில் இந்தியா முக்கிய பங்களிப்பைக் கொண்டிருக்கும் என்றார் அவர்.