ஐடிபிஐ வங்கியின் அடிப்படை மூலதனத்தை அதிகரிப்பதற்காக, ரூ. 9000 கோடி மூலதனத்தை அளிக்க மத்திய அரசு இன்று (செவ்வாய்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்,
"ஐடிபிஐ வங்கி, லாபத்தை நோக்கி திரும்புவதற்கு இந்த நடவடிக்கை உதவும். வழக்கமான முறையில் கடன் வழங்கும் செயல்களையும் இது மேம்படுத்தும். இதன்மூலம், அரசும் தனது முதலீட்டை திரும்ப மீட்டெடுப்பதற்கான வாய்ப்பும் உருவாகிறது.
மொத்தமுள்ள இந்த ரூ. 9300 கோடியில் 51 சதவீதத்தை (ரூ. 4743 கோடி) எல்ஐசி கவனித்துக் கொள்கிறது. மீதமுள்ள 49 சதவீதத்தை (ரூ. 4557 கோடி) அரசு ஒரே தவணையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியில் எல்ஐசியின் பங்கு விகிதம் கடந்த ஜனவரி மாதம் 51 ஆக உயர்ந்ததையடுத்து, அரசின் பங்கு 86 சதவீதத்தில் இருந்து 46 ஆக குறைந்தது.
இதனால், ஐடிபிஐ வங்கி தனது மூலதனத்தை தாமாக அதிகரித்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.