ஐடிபிஐ வங்கிக்கு ரூ.9,300 கோடி மூலதனம் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
உரிய நேரத்தில் ஐடிபிஐ வங்கிக்கு வழங்கப்படும் இந்த நிதி உதவி அதன் அடிப்படை மூலதனத்தை மேம்படுத்த உதவும். இதன் மூலம், செயல்பாடுகள் மேம்பட்டு அந்த வங்கி லாப பாதைக்கு திரும்பும். மேலும், அவ்வங்கியின் கடன் வழங்கும் நடவடிக்கைகளும் வழக்கமான அளவில் வேகமெடுக்கும்.
வழங்கப்படவுள்ள மொத்த தொகையான ரூ.9,300 கோடியில், எல்ஐசி அவ்வங்கியில் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளதற்காக ரூ.4,743 கோடி அதனை சாரும்.
எஞ்சிய ரூ.4,557 கோடியை, 49 சதவீத பங்குகளை வைத்துள்ளதற்காக மத்திய அரசு ஒரே தவணையில் வழங்கும் என்றார் அவர்.
ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு வைத்திருந்த பங்கு மூலதனத்தை 86 சதவீதத்திலிருந்து 46.46 சதவீதமாக குறைத்துக் கொண்டது. அதேசமயம், நடப்பாண்டு ஜனவரியில், அந்த வங்கியில் எல்ஐசி தனது பங்கு மூலதனத்தை 51 சதவீதமாக அதிகரித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.