பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவை இணைத்துக் கொள்வதற்கு பிஎன்பி இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து பிஎன்பி, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
பஞ்சாப் நேஷனல் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மூன்று வங்கிகளை இணைப்பது தொடர்பான நிதி அமைச்சகத்தின் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இறுதியில், பிஎன்பியுடன் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவை இணைப்பதற்கு இயக்குநர் குழு கொள்கை அளவில் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது என பிஎன்பி செபியிடம் தெரிவித்துள்ளது.
முன்னுரிமை பங்கு ஒதுக்கீட்டின் அடிப்படையில், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.18,000 கோடி மூலதனம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கும் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
இணைப்பு தொடர்பாக பங்குதாரர்களின் அனுமதியைப் பெறும் வகையில் வங்கியின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி நடைபெறும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
10 பொதுத் துறை வங்கிகளை இணைப்பது தொடர்பான மிகப்பெரிய திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உலக அளவில் வலுவான வங்கிகளை உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையிலும் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.