அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின்போதும் ஏற்றம் கண்டது.
அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் தணிவதற்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து சந்தையில் டாலருக்கான தேவை குறைந்து ரூபாய் மதிப்பு உயர்ந்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு தொடக்கத்தின்போது 71.87-ஆக இருந்தது. பின்னர் வர்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 12 காசுகள் உயர்ந்து 71.72-ஆனது.
அந்நிய செலாவணி சந்தையில் கடந்த மூன்று தினங்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 67 காசுகள் உயர்ந்துள்ளது. அதேசமயம் வார அடிப்படையில், உள்நாட்டு கரன்ஸியின் மதிப்பு அமெரிக்க டாலரிடம் 30 காசுகளை இழந்துள்ளது.