மின்சாரம், டீசல் ஆகிய இரண்டிலுமே இயங்கக் கூடிய "ஹைபிரிட்' டிராக்டர் ரகத்தை எஸ்கார்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
டிராக்டர்கள் மற்றும் பண்ணை இயந்திரங்களைத் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எஸ்கார்ட்ஸ், தில்லியில் வெள்ளிக்கிழமை நடத்திய வருடாந்திர கண்காட்சியில், தனது "ஹைபிரிட்' ரக டிராக்டரின் மாதிரியை அறிமுகப்படுத்தியது.
இந்த டிராக்டரை பேட்டரி மூலம் இயக்க முடியும். அவ்வாறு இயக்கும்போது அந்த டிராக்டர் புகை மாசை ஏற்படுத்தாது. பேட்டரியின் மின்சக்தி தீர்ந்து போனால், இந்த டிராக்டரை டீசல் மூலமும் இயக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்தது.இதுதவிர, கிராமப்புறங்களில் போக்குவரத்துக்குப் பயன்பாட்டுக்காக நிறுவனம் உருவாக்கியுள்ள "ரைடர்' வாகனத்தின் மாதிரியும் இந்த நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மூலம் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முற்படுவதாக நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான நிகில் நந்தா தெரிவித்தார்.