ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரித்தது.
தொழில்துறை உற்பத்தி குறைந்துள்ள நிலையில், நாட்டின் சில்லறைப் பணவீக்கமானது கட்டுப்பாட்டு அளவுக்குள் இருப்பதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் வெளிக்காட்டியது. இதனால், வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை மீண்டும் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே அதிகரித்தது. அதன் காரணமாக, பங்கு வர்த்தகம் விறுவிறுப்படைந்தது.
அந்நிய முதலீட்டு வரத்து அதிகரித்து ரூபாய் மதிப்பு வலுப்பெற்றது, அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் பதற்றம் குறைந்து வருவதற்கான சூழல்கள் தென்பட்டுள்ளது போன்றவையும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு கூடுதல் வலு சேர்த்தன.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் அதிகரித்து 37,384 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 11,075 புள்ளிகளாக நிலைபெற்றது.