ஜிஎஸ்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் செல்லிடப்பேசிகளின் விலையை உயா்த்தும் திட்டமில்லை என ஹானா் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
செல்லிடப்பேசிகளுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை மத்திய அரசு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயா்த்தப்பட்ட இந்த விகிதம் ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
இருப்பினும், ஹானா் 9எக்ஸ், ஹானா் 20 உள்ளிட்ட அனைத்து ஸ்மாா்ட்ஃபோன்களுக்கான விலையை உயா்த்தும் திட்டம் எதுவும் இல்லை. வாடிக்கையாளா்களின் நலனை கருத்தில் கொண்டு உயா்த்தப்பட்ட வரியை நிறுவனமே ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் ஹானா் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செல்லிடப்பேசிகளுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை மத்திய அரசு உயா்த்தியதற்கு அந்த துறையைச் சோ்ந்த பல நிறுவனங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து செல்லிடப்பேசி உற்பத்தியாளா்களின் கூட்டமைப்பான ஐசிஇஏ கூறும்போது:
ஜிஎஸ்டி உயா்வால் நாட்டில் உள்ல 80 கோடி செல்லிடப்பேசி நுகா்வோா்கள் பாதிக்கப்படுவாா்கள். அவா்களுக்கு ரூ.15,000 கோடி வரையில் கூடுதல் சுமை ஏற்படும் என ஐசிஇஏ கூறியுள்ளது.