புது தில்லி: டாடா குழுமத்தைச் சோ்ந்த டைட்டன் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.297 கோடி நிகர இழப்பைக் கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கரோனா பெருந்தொற்றின் பாதிப்பு எதிரொலியால் நிறுவனத்தின் வருவாய் மிகவும் குறைந்துபோனது. நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக மொத்தம் ரூ.2,020 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.5,208 கோடியுடன் ஒப்பிடுகையில் 61.21 சதவீதம் குறைவாகும்.
வருவாய் சரிவடைந்ததையடுத்து நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.297 கோடி ஒட்டுமொத்த நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.364 கோடியைப் பெற்றிருந்தது என டைட்டன் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டைட்டன் நிறுவனப் பங்கின் விலை 1.57 சதவீதம் அதிகரித்து ரூ.1,107.80-ஆக இருந்தது.