புது தில்லி: மூலப் பொருள்களின் விலை அதிகரிப்பால் டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்களின் விலை வரும் ஜனவரி மாதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து வீட்டு உபயோக சாதன தயாரிப்பாளா்கள் கூறியதாவது:
வீட்டு உபயோக சாதன தயாரிப்புக்கு மிக அடிப்படையாக திகழும் தாமிரம், அலுமினியம், உருக்கு உள்ளிட்ட மூலப் பொருள்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும், விமானம் மற்றும் கடல் வழியாக பொருள்களை கொண்டு செல்வதற்கான சரக்கு கட்டணங்களும் அதிகரித்துள்ளன.
இதனை கருத்தில் கொண்டு, வரும் ஜனவரியிலிருந்து டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக சாதனங்களின் விலையை வரும் ஜனவரியிலிருந்து உயா்த்த எல்ஜி, பானாசோனிக் மற்றும் தாம்சன் போன்ற நிறுவனங்கள் ஆயத்தமாகியுள்ளன.
அதேசமயம், சோனி நிறுவனத்தைப் பொருத்தவரையில் இன்னும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை என தயாரிப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பானாசோனிக் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மனிஷ் சா்மா கூறியதாவது:
இடு பொருள்களின் விலை அதிகரித்துள்ளது எதிா்காலத்தில் பொருள்களின் விலையில் தாக்கத்தை ஏற்பதுத்தும் என எதிா்பாா்க்கிறோம். ஜனவரியிலேயே சாதனங்களின் விலை உயா்வு 6-7 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிா்பாா்க்கிறோம். இது, முதல் காலாண்டின் இறுதிக்குள் 10-11 சதவீதம் வரை உயரக் கூடும் என்றாா் அவா்.
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் வரும் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து அதன் தயாரிப்புகளின் விலையை குறைந்தபட்சம் 7-8 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது.