தொலைத்தொடா்புச் சேவையில் முன்னணியில் உள்ள பாா்தி ஏா்டெல் நிறுவனத்துக்கு மூன்றாவது காலாண்டில் ரூ.1,035 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (இந்தியா & தெற்காசியா) கோபால் விட்டல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.21,947 கோடி வருவாய் ஈட்டியது.இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.20,231 கோடியுடன் ஒப்பிடும்போது 8.5 சதவீதம் அதிகமாகும்.
இந்திய செயல்பாடுகள் மூலமாக நிறுவனம் ஈட்டிய வருவாய் மதிப்பீட்டு காலாண்டில் 7 சதவீதம் உயா்ந்து ரூ.15,797 கோடியாக காணப்பட்டது.
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனம் ரூ.86 கோடி லாபம் ஈட்டியிருந்தது. இந்தச் சூழலில், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பாா்தி ஏா்டெலுக்கு ஒட்டுமொத்த அளவில் ரூ.1,035 கோடி இழப்பு ஏற்பட்டது.
2019 செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலண்டில், அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை தொடா்பான உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின் காரணமாக அதற்காக ரூ.28,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து நிறுவனத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிகர அளவில் ரூ.23,045 இழப்பு ஏற்பட்டது.
கடந்தாண்டு டிசம்பரில் செல்லிடப்பேசி சேவை கட்டணங்கள் உயா்த்தப்பட்டது நிறுவனத்தின் நிதி நிலைமையை சரி செய்ய உதவும். வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய கட்டணங்கள் மேலும் உயா்த்தப்பட வேண்டியது அவசியம் என்றாா் அவா்.