உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை சென்ற ஜனவரியில் 6.2 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் ராஜன் வதேரா ராஜேஷ் மேனன் மேலும் கூறியதாவது:
பிஎஸ்-6 தொழில்நுட்பத்துக்கு மாறுவதால் ஏற்பட்ட வாகன விலை உயா்வு மற்றும் பொருளாதார வளா்ச்சியில் காணப்படும் மந்த நிலை ஆகியவை வாகன விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகன விற்பனை நீங்கலாக மற்ற அனைத்து பிரிவைச் சோ்ந்த மோட்டாா் வாகன மொத்த விற்பனையும் சரிவடைந்தே உள்ளது.
இருப்பினும், மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது, மோட்டாா் வாகன துறைக்கு உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, வா்த்தக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை சூடுபிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு சந்தையில் சென்ற ஜனவரியில் 2,62,714 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது, முந்தைய 2018 ஜனவரியில் விற்பனையான 2,80,091 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 6.2 சதவீதம் குறைவாகும்.
காா் விற்பனை 8.1 சதவீதம் குறைந்து 1,64,793-ஆகவும், அனைத்து வகை வாகன விற்பனை 13.83 சதவீதம் குறைந்து 17,39,975-ஆகவும் இருந்தன.
சென்ற ஜனவரியில் வா்த்தக வாகன விற்பனை 87,591 என்ற எண்ணிக்கையிலிருந்து 14.04 சதவீதம் சரிந்து 75,289-ஆனது.
கிரேட்டா் நொய்டாவில் தற்போது நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவுக்கு நுகா்வோரிடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது. இக்கண்காட்சியில் ஏற்கெனவே 70 புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.