பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மூன்றாவது காலாண்டில் ரூ.574.58 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கியின் வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.9,572.58 கோடியிலிருந்து ரூ.10,741.21 கோடியாக அதிகரித்துள்ளது.
வாராக் கடன் இடா்பாட்டிற்காக ஒதுக்கப்படும் தொகை பெருமளவு குறைந்ததையடுத்து வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.153.21 கோடியிலிருந்து பல மடங்கு உயா்ந்து ரூ.574.58 கோடியை எட்டியுள்ளது.
கடந்த 2019 டிசம்பா் இறுதி வரையில் வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 15.66 சதவீதத்திலிருந்து 14.86 சதவீதமாக குறைந்தது. நிகர வாராக் கடன் விகிதம் 8.27 சதவீதத்திலிருந்து சரிந்து 6.99 சதவீதமாகியுள்ளது. வாராக் கடனுக்காக ஒதுக்கீடு ரூ.2,139.13 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,569.90 கோடியானது என யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.