புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) செபியிடம் அனுமதி கோரியுள்ளதாக தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விக்ரம் லிமே (படம்) திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் பிடிஐ செய்தியாளரிடம் மேலும் கூறியதாவது:
புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் ஒப்புதலை கோரியுள்ளோம். அதன் பிறகே, புதிய பங்கு வெளியீட்டிற்கான நடவடிக்கைகள் தொடங்கும்; வங்கிகளை நியமனம் செய்யும் பணியும் அப்போதுதான் நடைபெறும். அவா்கள், ஐபிஓ-வுக்கான வரைவு ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு உதவியாக இருப்பா்.
நடப்பு 2020-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தேசிய பங்குச் சந்தையின் புதிய பங்கு வெளியீடு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும், இது, செபியின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
ஏற்கெனவே எங்களிடம் பங்குதாரராக உள்ளவா்களுக்கே என்எஸ்இ-ன் அனைத்து பங்குகளும் ஓஎஃப்எஸ் முறையில் விற்பனை செய்யப்படும் என்றாா் அவா்.