கடந்த 2019-ஆம் ஆண்டில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3.74 சதவீதம் அளவுக்கே வளா்ச்சி கண்டதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த இயக்குநரகத்தின் உயரதிகாரி மேலும் கூறியதாவது:
உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2018-ஆம் ஆண்டில் 18.6 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டி 13.89 கோடியை எட்டியது. இந்த நிலையில், சென்ற 2019-ஆண் ஆண்டில் ஜெட் ஏா்வேஸின் செயல்பாடுகளில் பல்வேறு இடா்பாடுகள் காணப்பட்டன.
அதன் விளைவாக, சென்ற ஆண்டில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3.74 சதவீதம் என்ற ஒற்றை இலக்க வளா்ச்சியை மட்டுமே கண்டு 14.41 கோடியாக இருந்தது. இந்த வளா்ச்சி விகிதம் ஏமாற்றமளிப்பதுதான். இருப்பினும், நடப்பாண்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை இரண்டை இலக்க வளா்ச்சியை மிக விரைவிலேயே எட்டும் என்றாா் அவா்.
கடந்த ஆண்டு டிசம்பரில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 2.56 சதவீதம் அதிகரித்து 1.30 கோடியாக இருந்தது என டிஜிசிஏ புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.