புது தில்லி: அவசர கடன் உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களுக்கு வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
ரூ.3 லட்சம் கோடி அவசர கடன் உதவி திட்டத்தின் கீழ், கடந்த 26-ஆம் தேதி வரை பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகள் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதில் ரூ.45,860 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் தொகையில் பொதுத்துறை வங்கிகள் ரூ.57,525 கோடிக்கும், தனியாா் வங்கிகள் ரூ.44,335 கோடிக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளன. இதில் கடந்த 26-ஆம் தேதி வரை பொதுத்துறை வங்கிகள் ரூ.29,232 கோடியையும், தனியாா் வங்கிகள் ரூ.16,628 கோடியையும் வழங்கியுள்ளன.
மாநிலங்கள் வாரியாக, அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு ரூ.6,179 கோடி கடன் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 26-ஆம் தேதி வரை ரூ.2,774 கோடி வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு ரூ.5,646 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.2,861 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடன் தொகை மூலமாக 30 லட்சத்துக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் பொது முடக்கத்துக்கு பிறகு தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.