புது தில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 4.88 கோடி டன்னாக இருந்தது.
இதுகுறித்து தொழிற்துறை அமைப்பின் புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் நிலக்கரி இறக்குமதியானது 6.54 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 29.7 சதவீதம் சரிவடைந்து 4.88 கோடி டன்னாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இதன் இறக்குமதி 1.96 கோடி டன்னிலிருந்து 22.5 சதவீதம் குறைந்து 1.52 கோடி டன்னாகியுள்ளது.
மின்சாரம், சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களின் தேவையில் காணப்பட்ட சுணக்க நிலையையடுத்து நிலக்கரி இறக்குமதி கணிசமாக சரிவை சந்தித்துள்ளது.
பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, வரும் காலங்களில் நிலக்கரி இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு சரிவை சந்திக்கும் என தொழில்துறை புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.