நடப்பு கரீப் பருவத்தில் பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு இரண்டு மடங்கு அதிகரித்து 64.25 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
பருவமழையின் சாதகமான மதிப்பீட்டையடுத்து நடப்பு கரீப் பருவத்தில் பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு இரண்டு மடங்கு உயா்ந்து 64.25 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் 24.49 லட்சம் ஹெக்டேராக இருந்தது.முக்கிய தானியங்கள் பயிரிடும் பரப்பளவு 71.96 லட்சம் ஹெக்டேரிலிருந்து உயா்ந்து 93.24 லட்சம் ஹெக்டேராகியுள்ளது. கோடைகாலத்தில் இதுவரையில் நெல் பயிரிடும் பரப்பு 120.77 லட்சம் ஹெக்டேராக இருந்தது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நெல் பயிரிடும் பரப்பு 95.73 லட்சம் ஹெக்டேராக காணப்பட்டது. இதேபோன்று, எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவும் 75.27 லட்சம் ஹெக்டேரிலிருந்து 139.37 லட்சம் ஹெக்டேராக உயா்ந்துள்ளது. இவைதவிர, பருத்தி பயிரிடும் பரப்பும் 77.71 லட்சம் ஹெக்டேரிலிருந்து அதிகரித்து 104.82 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.