
புது தில்லி: இந்தியாவில் நடப்பாண்டில் ஆன்லைன் மளிகை சந்தை விற்பனை மதிப்பு 300 கோடி டாலரைத் தாண்டும் என ஸ்பென்ஸர்ஸ் ரீடெயில் தலைவர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
கொவை-19 நோய்தொற்றின் தாக்கத்துக்குப் பிறகு ஆன்லைனில் பொருள்களை வாங்கும் பழக்கம் மக்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அத்தியாவசியமான பொருள்களை அவர்கள் வீடுகளிலிருந்தே வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து, நடப்பு 2020-ஆம் ஆண்டில் ஆன்லைன் மூலமான மளிகை பொருள் விற்பனை 300 கோடி டாலரைத் தாண்டும் (ரூ.22,500 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 2019}ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 76 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.
ஸ்மாட்போன் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் குறைந்த கட்டணத்தில் டேட்டா சேவை வழங்கப்படுவது ஆகியவை ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது என்றார் அவர்.