நாட்டின் மிகப்பெரிய வங்கியான திகழும் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தனிப்பட்ட நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 81 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்பிஐ-யின் தனிப்பட்ட மொத்த நிகர லாபம் ரூ.74,457.86 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.70,653.23 கோடியாக காணப்பட்டது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.2,312.02 கோடியிலிருந்து 81 சதவீதம் உயா்வு கண்டு ரூ.4,189.34 கோடியானது.நடப்பாண்டு ஜூன் இறுதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் கடந்தாண்டைக் காட்டிலும் 7.53 சதவீதத்திலிருந்து 5.44 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 3.07 சதவீதத்திலிருந்து 1.8 சதவீதமாக சரிந்துள்ளது. வாராக் கடன் குறைந்துள்ளது மற்றும் எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுவன பங்கு விற்பனை ஆகியவை வங்கியின் லாபம் கணிசமான அதிகரிப்பதற்கு பெரிதும் உதவியது. எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் துணை நிறுவனத்தின் 2.1 சதவீத பங்கு விற்பனை வாயிலாக ரூ.1,539.73 கோடியை ஈட்டியதாக எஸ்பிஐ பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது. பங்கு விற்பனையையடுத்து, எஸ்பிஐ லைஃபில் எஸ்பிஐயின் பங்கு மூலதனம் 57.70 சதவீதத்திலிருந்து 55.60 சதவீதமாக குறைந்துள்ளது.