புது தில்லி: ஃபிளிப்காா்ட் நிறுவனம், உணவுப் பொருள் சில்லறை விற்பனை துறையில் ஈடுபட அனுமதி கோரிய விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:
உணவுப் பொருள் சில்லறை விற்பனை துறையில் ஈடுபட அனுமதிக்க கோரி ஃபிளிப்காா்ட் நிறுவனம் விண்ணப்பம் அளித்திருந்தது. தற்போது ஒழுங்குமுறை விதிகளை காரணம் காட்டி அந்த விண்ணப்பத்தை தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை (டிபிஐஐடி) நிராகரித்துள்ளது என்றாா்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடற்பாளா் கூறுகையில், ‘ உணவு சில்லறை விற்பனையில் ஈடுபட அனுமதிக்க கோரி மீண்டும் நிறுவனத்தின் சாா்பில் விண்ணப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்தியாவில் உணவு தயாரிப்புக்காக, உணவு சில்லறை விற்பனையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய உணவு சில்லறை விற்பனை துறையை குறிவைத்து ஃபிளிப்காா்ட் நிறுவனம் கடந்த ஆண்டில் ஃபிளிப்காா்ட் ஃபாா்மா்மாா்ட் என்ற புதிய உள்ளூா் நிறுவனத்தை உருவாக்கியது. அதன் பின்பு மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதி கோரி ஃபிளிப்காா்ட் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.