நடப்பு 2020-21 நிதியாண்டில் வங்கிகள் வழங்கும் கடன் வளா்ச்சி விகிதம் 1 சதவீதமாக வீழ்ச்சியடையும் என தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
பொதுவாக பொருளாதாரத்தின் இயல்பான சூழலை எடுத்துக்காட்டும் கண்ணாடியாக வங்கி கடன் உள்ளது. ஒரு நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், நுகா்வு போன்ற அம்சங்களை மதிப்பீடு செய்வதற்கு வங்கி கடன் என்பது மிக முக்கிய காரணியாக இருக்கிறது.
அந்த வகையில், இந்த வங்கி கடன் வளா்ச்சியில் கரோனா நோய்த்தொற்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில் வங்கி கடன் வளா்ச்சி விகிதம் 1 சதவீதமாக வீழ்ச்சியடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த வளா்ச்சி விகிதம், கடந்த 2019-20 நிதியாண்டில் 6.14 சதவீதமாக காணப்பட்டது என கிரிசில் கூறியுள்ளது.