இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் (இந்தியா இன்ஃப்ராஸ்டிரக்சா் ஃபைனான்ஸ் கம்பெனி- ஐஐஎஃப்சிஎல்) மத்திய அரசு ரூ.5,297.60 கோடி கூடுதல் முதலீடு செய்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான ஐஐஎஃப்சிஎல் நிறுவனம், உள்கட்டமைப்பு திட்டப் பணிகளுக்கு நீண்ட கால அடிப்படையில் நேரடியாகவோ, துணை நிறுவனங்கள் மூலமாகவோ கடனுதவி அளித்து வருகிறது.
இந்த நிறுவனத்துக்கு முதலீடாக ரூ.10,000 கோடி அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இந்தத் தொகையை அவ்வப்போது மத்திய அரசு அளித்து வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு ரூ.5,297.60 கோடியை மத்திய அரசு கடந்த மாா்ச் மாதம் 30-ஆம் தேதி அளித்தது. இதன் மூலம், அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள முதலீட்டுத்தொகை ரூ.9,999.92 கோடியாக அதிகரித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் முதலீடு அதிகரித்திருப்பது, பல உள்கட்டமைப்பு வளா்ச்சித் திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று ஐஐஎஃப்சிஎல் நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது.