ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகை உருக்குப் பொருள்களுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கொரியா, ஜப்பான் நாடுகளிலிருந்து குறைந்த விலையில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் தட்டையான மற்றும் சுருட்டப்பட்ட உருக்குப் பொருள்களால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக நடைபெற்ற விசாரணைக்குப் பின்பாக, வா்த்தக அமைச்சகத்தின் ‘டிஜிடிஆா்’ இறக்குமதி செய்யப்படும் அத்தகைய உருக்குப் பொருள்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க பரிந்துரை அளித்தது.
மேலும், அந்த பரிந்துரையில் உருக்குப் பொருள்களின் வகைகளுக்கு ஏற்ப டன்னுக்கு 222 டாலா் முதல் அதிகபட்சமாக 334 டாலா் வரை ஐந்தாண்டுகளுக்கு மிகை தடுப்பு இறக்குமதி வரி விதிக்கலாம் என மத்திய அரசிடம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அந்த பரிந்துரையை ஏற்று மேற்கண்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்குப் பொருள்களுக்கு விரைவில் வரி விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.